வேட்டி கட்டி காந்தியே வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.....

தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மிக மகிழ்ச்சிகுறிய செய்தி. கூடுதலாக பத்திரிக்கையாளர்  மயிலைபாலு எழுதிய    வேட்டி மீது வெறுப்பு ஏன்?  ......
சென்னையில் சில கிளப்கள் இருக்கின்றன. இவை நாடு விடுதலை அடைவதற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை. கிளப் என்றால் மனமகிழ்மன்றம்.
வேலை முடிந்த பின் துரைமார்களும் இவர்களின் துணைவியர்களான துரைசானிகளும் துரைமார்களுக்குத் துணைபோன உள்ளூர் அடிவருடிகளும் கூடிக் களிக்கின்ற இடங்கள் தான் இந்த மனமகிழ்மன்றங்கள். இங்கே உறுப்பினர்களாக இருந்தவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தின் படி முழுக்கால் ஒரு சட்டை முழுக்கைச் சட்டை, அதற்கும் மேலே கோட், கழுத்திலே டை, கால்களில் ஷூக்கள் சகிதம் செல்வதுவழக்கம். அதற்கேற்ப அவற்றின் விதிகளும் உருவாக்கப்பட்டன.

தங்களின் உடை கலாச்சாரத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் விதிகள் உருவாக்கப்பட்டிருக்கும். அல்லது அந்தியர்களை (அவர்களைப் பொறுத்த வரை இந்தியர்கள் அந்தியர்கள் தானே!) வெளியே நிறுத்த இவை தேவைப்பட்டிருக்கும்.இதுபோன்ற அகக் காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் சில புறக்காரணங்கள் மிக முக்கிய மானவை. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்துக்கு சொந்தக்காரர்கள் நாம் என்ற இறுமாப்பு கொண்டிருந்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்த இறுமாப்பு தவிடுபொடியாய்த் தகர்வதற்கு எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. இருப்பினும் அஹிம்சை என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்ட காந்தி வழக்கறிஞருக்காக லண்டன் சென்று படித்தபோதும், தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும், கருப்பு இனமக்களை அடிமைப்படுத்திய வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியபோதும் ஆங்கிலேயர்களைப் போலவே தான் காந்தியும் ‘கோட்சூட்டில்’ இருந்தார்.

இந்தியாவுக்கு வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபின் தோற்றத்தில் மாற்றம் செய்தார்.“1921 செம்டம்பரில் காந்தி தமது இயக்கத்துக்கு ஒரு இறுதி உந்துவிசையை அளித்தார். வாழ்க்கையின் எஞ்சிய காலத்தில் ராட்டையில் நூற்ற நூலால் தயாரிக்கப்பட்ட அரை ஆடையையும் மேலே ஒரு துண்டையும் அணிவதைத் தவிர வேறெதையும் அணியப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்தார்” (நள்ளிரவில் சுதந்திரம் பக். 88)அரைஆடை என்பது வேட்டி. காந்தி வேட்டிக்கு மாறிய அல்லது வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாக வேட்டியை மாற்றிய இடம் தமிழ்நாடு என்பது வரலாறு. மதுரை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட போதுதான் அவர் இந்த ஞானத்தைப் பெற்றார். தமிழகத்தின் வேட்டிக்கு அவ்வளவு மதிப்பு. ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம். இதனுடைய நீட்சிதான் அந்நியத்துணிகள் பகிஷ்கார (நிராகரிப்பு) இயக்கம்.

காந்தியடிகளின் இந்த ஆடைப்போராட்டத்தில் கடுப்பேறிய, பிரிட்டிஷ் பிரதமராக இருந்த, வின்ஸ்டன் சர்ச்சில் கோபத்தோடு காந்திக்கு சூட்டிய பட்டப் பெயர் தான் ‘அரை நிர்வாணபக்கிரி’.இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது பற்றிய வட்டமேசை மாநாட்டுக்கு வருமாறு காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் சிறையிலிருந்து பிரிட்டனின் பேச்சுவார்த்தைக்குச் சென்ற முதலாவது மாமனிதர் காந்திதான். எப்படிச் சென்றார் ?..“கப்பலிலிருந்து இறங்கும் போதும் காந்தி அரை ஆடையுடனும் மூங்கில் கைத்தடியுடனும் தான் இருந்தார்”மேன்மை தங்கிய பிரிட்டிஷ் பேரரசரின் மகாராணியாரின் பிரதிநிதியான பிரதமருடனும் வைஸ்ராயுடனும் பேச்சுவார்த்தை நடத்த அரண் மனைக்குள்ளேயே காந்தியடிகள் வேட்டியுடன் தான் நுழைந்தார். இன்னின்னாரை சந்திக்கும் போது இன்னின்ன நிகழ்வுகளுக்கு இன்னின்ன உடையோடு தான் என்கிற மேற்கத்திய கலாச்சாரத்தை முறித்துப் போட்டவர் காந்தி.


அதன் அடையாளம் தான் வேட்டி.காந்தி இப்படி வேட்டியுடன் வருவதை வெள்ளை ஏகாதிபத்தியம் விரும்பவில்லை.“முன்னாளில் ‘இன்னர் டெம்பிள்’ வழக்கறிஞராக இருந்தவரும் இந்நாளில் தேசத்துரோகியான அரைநிர்வாணப் பக்கிரியாக இருப்பவருமான காந்தி பேரரசரின் பிரதிநிதியுடன் சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வைஸ்ராய் மாளிகையின் படிகளில் ஏறிவருவது அருவருப்பாகவும் தரம் தாழ்ந்ததாகவும் காட்சிஅளிக்கிறது என்று கூறி சர்ச்சில் எதிர்ப்பு தெரிவித்தார்” (நள்ளிரவில் சுதந்திரம் பக். 97)வேட்டி அணிந்துவருவது அருவருப்பானது, தரம் தாழ்ந்தது என்று கூறிய சர்ச்சில் இன்னும் சாகவில்லை; வெள்ளைய ஏகாதிபத்தியம் இன்னமும் வெளியேறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் ஜிம்கானாகிளப், சென்னை கிரிக்கெட் கிளப் வகையறாக்களுக்குள் வேட்டி கட்டிக் கொண்டு உள்ளே வராதே என்பது. ஒருவேளை காந்தியே மீண்டும் வந்திருந்தாலும் இவர்கள் தடுத்திருப்பார்கள். ‘விதி’ப்படி கிளப் உறுப்பினர்கள் உடலில் ‘வெள்ளை’ ரத்தம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது போலும்!

உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்பது சங்க கால ஆடைக்கலாச்சாரத்தைச் சொல்வது. இடுப்பில் ஒரு வேட்டி மேலே ஒரு துண்டு என்ற ஆதித்தமிழரின் உடையில் மாற்றம் வரலாம். மாற்றத்தை ஏற்பது மனித இயல்பு. ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத் தமிழர்களின் அடையாளமான வேட்டியை அணிந்து வந்தால் - ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாக காந்தியடிகள் கைக்கொண்ட வேட்டியை அணிந்து வந்ததால் - முதலமைச்சராக இருந்தாலும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் - உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் - மூத்த வழக்கறிஞர்களாக இருந்தாலும் சுட்டு விரல் நீட்டி வெளியே வழிகாட்டும் இழிதகைமையை ஏற்கப் போகிறோமா? மாறாத விதிகள் என்று ஏதும்இல்லை. அரசமைப்புச் சட்ட விதிகள் நூற்றுக்கும் அதிகமான முறை திருத்தப்பட்டிருக்கும் போது அதை விட உயர்வானதாக கிளப் விதிகள் இருக்க முடியுமா என்ன? அதுவாகவும் திருந்தலாம். திருத்தவைக்கவும் செய்யலாம்.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments